#1627 to #1629

#1627. சிந்தை சிவன் பால்

இருந்தி வருந்தி எழில் தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந் திந்திரனே எவரே வரினும்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.

சிவன் மீது சிந்தையை இருத்தி, உடலை வருத்தி மாதவம் செய்பவர்கள, இந்திரனோ அன்றி வேறு எவரேனும் வந்து அவர்கள் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தாலும், சிறிதும் சிந்தை கலங்காமல் தன் உள்ளக் கருத்தைச் சிவன் மீதே பொருத்தி இருப்பார்.

#1628. அணுகுவதற்கு அரியவன் சிவன்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்
வரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

சிவன் தவம் செய்யாதவர்களுக்கு மறைந்து உ றைவான்; தவம் செய்பவர்களுக்கு மறையாமல் தெரிவான். சிவன் புறக் கண்களுக்குப் புலப்படமாட்டான். அவன் அகக் கண்களுக்கு நன்கு புலப்படுவான். பரந்து விரிந்த வீசும் சடையை உடையவன். ஆணிப் பொன்னின் நிறம் கொண்டவன். பக்குவம் அடைந்த சீவர்களின் மதி மண்டலத்தில் சிவன் விளங்குவான்.

1629. தானே வெளிப்படுவான்

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

பின்னால் அடைய வேண்டிய இனிய பிறப்பை முன்னமேயே நியதியாக அமைப்பவன் சிவன். சீவன் சிவனை அறிய முயற்சி செய்யும் போது, சிவன் சீவன் முன்பு தானே வெளிப்படுவான். சாதகனின் தளராத மன உறுதியே இதைச் சாத்தியம் ஆகும்.